வியாழன், 30 நவம்பர், 2017

இப்போதும்
உன்னைக் காதலிக்கிறேன்..

மரணத்தின் வாசலில் ஒரு காலை வைத்து நுழையும் போது கூட நான் இதையே சொல்லக்கூடும்..

உன்னளவுக்கு
என்னால்
நேசிக்கப்பட்டதும்
வெறுக்கப்பட்டதுமாய்
வேறொன்று இருக்கவே முடியாது..
வேறொன்று இருக்கவும் கூடாது...

முரண்கள் முளைக்கும் போதெல்லாம்
உறவுகள் அழகாகின்றன..

உன்னோடு சமரசமாகவே முடியாது
முறைத்துக் கொண்டு நிற்கும் போதெல்லாம்
சமரசம் செய்ய முயல்வதே இல்லை நீ..

நானே தான் சமரசமாகிக் கொள்கிறேன்...

கோபத்தை நீட்டிப்பது எளிது..
ஆனால்
தாயைப் போல ப்ரியமான
உன்னைப் போல பிரிதொன்றை பெறுவது கடினம்..

கோபப்படுகிறேன்..
திட்டுகிறேன்..
வெறுக்கிறேன்..
சில போது
அடிக்கவும் செய்கிறேன்..

எனினும்
மீண்டும்
மழலையைப் போல ஓடியாந்து
உன் கால்களைக் கட்டிக் கொள்கிறேன்..

நீ ஏற்றுக்கொள்கிறாய்...

உடன்படவே முடியாத பொழுதுகளில்
நான் முறைக்கிறேன்
நீ அணைக்கிறாய்

ஏன் எனில்
நீ நான் என்பது
நாம்...

சத்தியமா இது ஒரு காதல் கவிதை..

செவ்வாய், 28 நவம்பர், 2017

அதே வேகத்தில் திமிறியெழும்...

வீழ்த்தப்படுவோமென தெரிந்தே
அரியணையேறுகின்றன
அதிகாரங்கள்...
கடிந்து கொள்வதிலிருந்து
தொடங்கப்படுகிறது
அவற்றின் வன்மம்..
எதிர்ப்பின் வீரியத்தைப் பொறுத்து
அவை பின்வாங்குகின்றன..
அல்லது
முன்னேறுகின்றன..
அமைதி நீடிக்க நீடிக்க
வன்மத்தோடு நெருக்கத் தொடங்குகின்றன..
லாபத்தின் சுவையை
ருசிக்க ருசிக்க
நெருக்குதலையும்
சுரண்டலையும்
தீவிரமாக்குகின்றன
அதிகாரங்கள்...
அடக்குதல்
அதிகரிக்கையில்
எந்த வேகத்தில்
அடக்கப்பட்டதோ
அதே வேகத்தில்
திமிறியெழும்...
அது சாக்கடையாயிருந்தால் கூட..
சாக்கடையே
அழுத்தம் தாளாமல்
பொங்கி எழும் எனும் போது...........